Sunday 29 December 2013

பல்லாக்குகளை உடைப்போம்




பல்லாக்குகளை உடைப்போம்
டெல்லி நம் தேசத்திற்கு மிகப் பெரிய செய்தியை உரக்கச் சொல்லியிருக்கிறது. ஆம், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற வெற்றி  சாதாரன மனிதனின் முக்கியத்துவம் என்ன என்பதை தான் டெல்லி பதிவு செய்துள்ளது. பன்னெடுங்காலமாகவே அரசர்களுக்கு வெண்சாமரம் வீசி பழகிய நம் சமுதாயம், சூத்திரர்கள் என்று மக்களை தாழ்த்தி வாழ்ந்த நம் சமுதாயம், நாட்டு மக்களின் அபிப்ராயங்களை குப்பையில் போட்டுவிட்டு பாபர் முதல் பரங்கியர் வரை பல அன்னிய அரசுகளுடன் தன் சொந்த சுய லாபங்களுக்காக கூட்டு சேர்ந்தும், குலாம் போட்டும் வாழ்ந்த அரச பரம்பரைகளுக்கும், உயர் சாதியினருக்கும், தனிமனிதர்களுக்கும் அடிமையாய் வாழ்ந்தே பழகிய சாதாரன மனிதன், சுய சிந்தனையையும், சுதந்திர உணர்வையும், அனைவரும் சமம் என்ற மதத்தை முன்னெடுத்து வல்லமை மிகப் பொருந்திய ஆதிக்க சக்திகளின் ஆணி வேர்களை அசைத்துப் பார்த்துள்ளது  உண்மையில் மிகப் பெரிய மாற்றமே.
அதிகாரம் என்பது பொதுவானது. அது சரியான மனிதர்களின் கையில் தான் இருக்க வேண்டும். கடமை செய்யும் அனைவருக்கும் அதிகாரம் செய்யும் உரிமை உள்ளது. அதிகாரம் ஒரு சிலரின் குடும்ப சொத்து அல்ல. பல்லாக்குகளை உடைப்பது தான் ஜனநாயகத்தை உருவாக்க அடிப்படையானது. தனி மனிதர்களின் ஆதிக்க மனோபாவத்தையும், ஜால்ரா கோஷ்டியினரின் புகழ் பாடல்கள் அரசியலில் எளிதாக வெளிப்பட்டு விடுகின்றன, ஆனால் நம் வாழ்வில் நம்மை சுற்றியும் இவை நடைபெறுகின்றன என்பது தான் உண்மை. குடும்பங்கள், நிறுவனங்கள், அமைப்புகள், அலுவலகங்கள், ஆன்மீக தலங்கள், என்று அங்கிங்கெனாதபடி எங்கும் தனி மனித ஆதிக்கமும் அவர்களை சேவித்து வாழும் மனிதர்களை நம்மால் பார்க்கமுடிகிறது.
மனிதர்களை அவர்களின் எண்ணம், மற்றும் செயல்களின் அடிப்படையில் மட்டுமே தரப்படுத்த வேண்டும் என்ற உணர்வு மக்களிடம் மேலோங்க வேண்டும். தனி மனிதர்களின் பதவி, செல்வாக்கு மற்றும் செல்வத்தின் அடிப்படையில் உயர்த்துவது கேவலமானதாக கருதும் போக்கு ஏற்பட வேண்டும். கல்வி பணிவை கற்றுத்தர வேண்டுமே தவிர அடிமைத்தனத்தை அல்ல. சரியான மற்றும் உயர்வான மனிதர்கள் என்பவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்பவர்களே. அவர்கள் ஏழையாக இருந்தாலும், எளிமையாக இருந்தாலும் அவர்களை வலுப்படுத்த அவர்கள் பக்கம் நிற்பது தான் சரி என்று மக்கள் நினைக்கவேண்டும். வி.ஐ.பி கலாசாரம் என்னும் அசிங்கத்தை ஆம் ஆத்மி கட்சி முடிவுக்கு கொண்டு வர முயன்றுள்ளது வரவேற்கத்தக்கதே. இதையெல்லாம் ஏற்கனவே தமிழகத்தில் காமராசர், கக்கன் போன்றோர் செய்திருந்தாலும் அவற்றை மறந்த நமக்கு இது நல்லதாகவே தெரிகிறது.     
இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள் சமாக வாழும் உரிமையை நமக்கு அளித்துள்ளது. கல்வியறிவு மிகுந்து வரும் இந்த சமூகத்தில் அதை ஏற்றுக்கொள்ளவது கூட கடினமாக இருப்பது வருத்தமாக இருக்கிறது. இந்த துதி பாடிகள் மோசமான கலாசாரத்தை முன்னெடுப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் தங்களின் அடிமை எண்னங்களின் சுவடுகளை தந்துவிட்டு போகின்றனர்.
சமூகத்தை இயக்குவது சாதாரன மனிதர்கள் தான். சமூகம் என்பதும் சாதரான மனிதர்களுக்கானது  தான். இதில் சாதாரன மனிதர்களை புறம் தள்ளுவது என்பது எவ்வளவு அயோக்கியதனமானது என்பதை சமூகம் உணர வேண்டும். சமூகத்தின் இயக்கம் மற்றும் முன்னேற்றம் சாதாரன மனிதர்களின் உழைப்பினால் உண்டானது தான் என்பதை அனைவரும் உணருவோமேயானால் உண்மையில் உன்னதமே.  ரெ.ஐயப்பன்

No comments:

Post a Comment