Monday 22 August 2016

சுதந்திரம்



சுதந்திரம்

ஆதவன் இளங்கதிர் பரப்பும் காலையிது
முன்னோர் தியாகத்தை நினைவு
கூறும் நேரமிது.

மூவர்ண கொடி வணங்க
வந்திருக்கும் சிட்டுகளே
இந்திய தேசத்தின் மொட்டுகளே
உங்களுக்கு என் வணக்கம்

சும்மா இருப்பதல்ல சுதந்திரம்
சோம்பி படுப்பதல்ல சுதந்திரம்
தேசத்ததை மதிக்காத நீங்கள்
சுவாசிப்பதில் பயனில்லை
கல்வி வாசிப்பதில் பொருளில்லை

நீ வாழ வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்.
நீ இந்த தேசத்தை ஆள வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்.
கோயில் கருவரை முதல்
கல்லறை வரை சமத்துவம் வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்
நீதி வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்
நிதி வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்
ஏன் இவ்வளவு
நிம்மதியாய் நீ வாழ வேண்டுமா- உனக்கு
சுதந்திரம் வேண்டும்.
ஏவல் செய்வதல்ல சுதந்திரம்
கண் விழித்து கடமையென்னும் காவல் செய்வது தான் சுதந்திரம்

அடுத்தவனுக்கு அடிமையாவது மட்டும் அடிமைத்தனமல்ல
உன் உடலுக்கு அடிமையாவதும் அடிமைத்தனமே
இங்கு வராதவர்களிடம் சொல்லிவிடுங்கள்
நீங்கள் அடிமைகள்
எஜமானர்கள் இல்லாத அடிமைகள்

இன்று நம் தேசத்தை நாமே ஆள்கிறோம்
உண்டு உறங்கி வசதியாக வாழ்கிறோம்
எப்படி வந்ததது இந்த வாழ்வு
சிந்தித்தோமா?

நம் முன்னோரின்
கண்ணீராலும் சென்னீராலும்
துளிர்த்தது இந்த தேசம்
தனக்காக வாழ்பவன் சாதனையாளன் என்றால்
சமூகத்திற்காக வாழ்பவனை
தனக்காக வாழாமல்
தலைமுறைகாக வாழ்பவனை
என்னவென்று சொல்வது
நான் சொல்கிறேன்
அவன் தான் தியாகி


எத்தனை தியாகிகளின்
தியாகத்தால் உருவான தேசமிது
நமக்காக சிறையில் வாடியவனை,
சிந்தித்து சிந்தித்து செத்தவனை,
தூக்கு கயிற்றை முத்தமிட்டவனை,
துப்பாக்கி துளைத்த அந்த உடல்களை
ஒரு நாள், ஒரு மணி நேரம்
நினைக்க மறுப்பவன்
மனிதனா?

தியாகிகளே
நித்தம் நித்தம்
இரத்தம் சிந்தி
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என அகிம்சை யுத்தம் செய்தீர்கள்
எங்களுக்காக சிறைபட்டீர்கள்,
செக்கிழூத்தீர்கள், பட்டினியால் வாடினீர்கள்
சிந்திக்க தடை பட்டீர்கள்
எலும்புகள் உடைபட்டீர்கள்
சொத்து இழந்தீர்கள், சுகம் இழந்தீர்கள்
நாளும் நாளும் சுதந்திரத்திற்காக
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று நடை போட்டீர்கள்
கதர் உடை போட்டீர்கள்
வீழ்ந்தது உங்கள் குடும்பம்
வீழ்ந்தது உங்கள் தேகம்
எழுந்தது எங்கள் தேசம்
சுதந்திர காற்றில் பறந்தது
எங்கள் தேசிய கொடி
அன்னியன் அகண்டான்
புண்ணிய தேசம் துளிர்த்தது

அணைகள் கட்டீனிர்கள்
தொழிற்சாலைகளின் ஆற்றல் கூட்டினிர்கள்
நிலம் பெருக்கி பயிர்கள் காட்டினிர்கள்
இப்படித்தான் ஒருவன் வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டினீர்கள்

மாணவ நண்பர்களே
நம் வீடும் நம் மாளிகையும்
தியாகிகளின் சமாதிகளின் மீது தான்
என்பதை அறிவாயா?
நம் வாழ்வும் வளமும்
தியாகிகளின் தியாகத்தால் தான்
என்பதை ஏற்பாயா?

தன்னலமற்ற தியாகிகளை
நினைவு கூறுவோம்
பொருள் கூட்டும் வாழ்வை விட
வாழ்வில் பொருள் கூட்டும்
வாழ்வை வாழ்ந்து காட்டிய
சுதந்திர போராட்ட தியாகிகளின்
வழி நடப்போம்
ரெ.ஐயப்பன்








Friday 12 August 2016

இந்தியாவின் ஜுராசிக் பார்க்



இந்தியாவின் ஜுராசிக் பார்க்
65 மில்லியன் முதல் 150 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியாவில் டைனோசர்கள் வாழ்ந்தது என்ற தகவல் உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கக்கூடும். நிலவியலாளர்கள் தற்போது இதனை உறுதி படுத்தியுள்ளனர். நிலவியல் கால அட்டவணைப்படி ஜூராசிக் காலத்திய அதாவது 240 முதல் 135 மில்லியன் ஆண்டுகளுக்கிடையே வாழ்ந்த டைனோசர்களின் இடுப்பெலும்புகளின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்திய மற்றும் ஜெர்மானிய நிலவியலாளர்கள் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள லொதாய் கிராமத்தில் நடத்திய அகழாய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய டைனோசர்களின் கால் அச்சு ஜெய்சால்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெய்நாராயன் பல்கலை கழத்தை சார்ந்த நிலவியல் ஆராய்ச்சியாளர்கள் நட்த்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த வகை டைனோசர்களின் முட்டை, எலும்பு மற்றும் பற்கள் ஏற்கனவே இந்தியாவில் கிடைத்திருக்கின்றன. இந்த வகை டைனோசர்களின் படிமங்கள் பிரான்ஸ், இத்தாலி, போலந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இவையெல்லாம் இமயமலைகள் உருவாவதற்கு முன் உள்ள காலத்தை சார்ந்துள்ளது.
தமிழகத்தில் அரியலூரில் உள்ள பெரியக்குறிச்சி கிராமத்தில் சுமார் 12.5 கிலோ கிராம் எடையுள்ள டைனோசர் முட்டை கிடைத்துள்ளது. இதே அரியலூரில் சேலம் பெரியார் பல்கலை கழத்தை சார்ந்த திரு.இராம்குமார் மற்றும் அவர் தலைமையிலான நிலவியல் ஆய்வாளர்கள் அரியலுரில் டைனோசரின் 20 முட்டைகளின் படிமங்களை கண்டறிந்துள்ளனர். இவை நீண்ட கழுத்துள்ள சைவ டைனோசர்கள் என கண்டறிந்துள்ளனர். சர்வதேச டைனோசர் ஆய்வு மையம் இதனை டைனோசரின் முட்டைகள் என உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் மீது மோதிய விண்கல் மற்றும் அதனைத் தொடர்ந்த எரிமலை வெடிப்பு செயல்களால் இந்தியாவில் டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என நிலவியலாளர்கள் கருதுகின்றனர்.
ரெ.ஐயப்பன்