Monday 30 September 2013

மக்களின் மன்னராட்சி



மக்களின் மன்னராட்சி

முடியாட்சியை நாம் விரட்டிவிட்டோம் என்று யார் சொன்னது? இன்னமும் தனிமனிதர்களையும், தகுதியில்லாத நபர்களைத் தூக்கிப்பிடிப்பதும், புகழ்பாடுவதும் நம் பரம்பரை குணங்களாக தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. ஐயா புகழ்பாடிகள், அம்மா புகழ்பாடிகள் என்று தமிழகத்தில் இருக்க, தேசிய அளவிலும் இந்த புகழ்பாடிகள் தொடர்வதுதான் கொடுமை.
ஜனநாயகத்தில் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்த வேண்டிய எதிர்க்கட்சிகள் மாற்று நபர்களை முன்னிறுத்துகின்றன. இது தான் கொள்கைப் பஞ்சம் போலும். சொல்ல வந்த செய்தி இது தான். மோடியை முன்னிறுத்தும் பா.ஜ.க போன்ற பெரிய எதிர்க்கட்சிகள் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்தத் தவறிவிட்டதோடு,  ஜனநாயகத்தில் தவறான முன்னுதாரணங்களை உருவாக்கிவிட்டன.
சில மாற்றுக் கொள்கைகளை முன் வைக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களோ பலவீனமாகவும், சந்தர்ப்ப அரசியலையும் செய்கின்றனர். மோடியை விட பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா பொருத்தமானவர் என்ற தா.பாண்டியனின் கருத்து அவரின் அடிமை குணத்தையும், கூட்டணி எண்ணத்தையும்தான் வெளிப்படுத்துகிறது. அயலுறவுக் கொள்கைகள், பொருளாதாரக் கொள்கை, ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகள், சுற்றுச்சூழல் கொள்கைகள் போன்றவற்றில் பா.ஜ.க, ஆளும் காங்கிரஸிலிருந்து எந்த விதத்திலும் மாற்றுக்கொள்கைகளை வைத்துக்கொள்ளவில்லை.
மக்களுடைய ஆட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் ஆட்சி என்பதல்ல மாறாக மக்களால் தேர்தெடுக்கப்படும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஆட்சிதான்.
ஒரு எதிர்கட்சி ஆளும்கட்சியிலிருந்து மாறுபட்ட கொள்கைகளை கூட முன்னிறுத்த முடியவில்லை என்றால் இது ஜனநாயகத்தின் பலவீனத்தைதான் காட்டுகிறது. இது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைகிறது. மக்களுக்கு ஒரு எதிர்கட்சியினால் கொடுக்கப்பட வேண்டிய வாய்ப்பை அக்கட்சியினால் தரமுடியாத நிலையில் அது ஜனநாயகத்தின் அடிப்படை நம்பிக்கைகளை நசுக்குகிறது. கட்சிகள் பல்வேறு விஷயங்களில் தங்களுடைய கொள்கை நிலைப்பாடுகளை முன்னிறுத்தும் போது தான் மக்களால் தெளிவாகத் தேர்ந்தெடுக்கமுடியும். ஜனநாயகம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் ஆட்சி அல்ல, மாறாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைளின் ஆட்சி என்பதை கட்சிகளும், மக்களும் உணரும் பொழுது தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.   
எங்கள் கட்சியில் யார் நாற்காலியில் அமர்ந்தாலும் இந்த கொள்கைகளின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படும் என்று சொல்லும் அளவிற்கு இந்த ஜனநாயக நாட்டை ஆள முயற்சிக்கும் கட்சிகள் ஜனநாயகம் மிக்கவைகளா? ஜால்ராக்களின் சத்தத்தில் கொள்ளைகளே கொள்கைகள் என ஆகிய பிறகு, அவற்றை மக்கள் இதெல்லாம் சகஜம் என ஏற்கும் பொழுதும், நேர்மை தனிமைப்பட்டு சிறுபான்மையாக ஒதுங்கி நிற்பது ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் செயல் இல்லையா?
நம்மிடம் நல்ல மாற்றங்களை உண்டாக்கும் அளவிற்கு சக்தி இல்லாத பொழுது நல்ல மாற்றங்களை நோக்கிச் சிந்திப்பதும், அவற்றிற்காகத் துணை நிற்பதும் நம் கடமையாகிறது.  இதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்காவது நாம் அறியாமையிலிருந்து விடுபட்டு இருக்கிறோமா? என்பதுதான் நம் கேள்வி.
ரெ.ஐயப்பன்


Friday 13 September 2013

விளம்பரமாகும் பக்தி



விளம்பரமாகும் பக்தி
என்னே கடவுளுக்கு வந்த சோதனை? ஏற்கனவே கோயில்கள் எல்லாம் பக்தியைச் சந்தைப்பொருளாக்கி விற்கும் கடைகளாகிவிட்டது.  இந்தத் துரித உணவுக்காலத்தில் கடவுளையும் துரிதமாகத் தரிசிக்கக் கோயில்களில் குறுக்கு வழி மன்னிக்கவும் சிறப்பு வழிக்கான கட்டணங்கள், கோயில்களின் கேண்டீன்களாகிவிட்ட பிராசாத கடைகள், ஆன் லைன் தரிசன வழிமுறைகள், மொட்டை அடித்தல், காது குத்துதல், தங்க ரதம் இழுத்தல், காவடி எடுத்தல், திருமணம் செய்தல் என்று கோயில்கள் விற்பனை மையங்களாகிவிட்ட நிலையில் வினாயக சதுர்த்தி கொண்டாட்டம் என்ற பெயரில் கடவுளரை தெருவில் கொண்டுவந்து வைத்துவிட்டோம். காசு இருந்தால் மட்டுமே கடவுளை தரிசிக்க முடியும் அதிலும் எந்த அளவு அதிகமாக வசதி உள்ளதோ அந்த அளவு வசதியாக தரிசிக்க முடியும் என்ற நிலை. மனிதர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை கடவுள்களிடையேயும் கொண்டுவந்துவிட்டோம். பணக்கார பக்தர்களின் இந்த சதியையும், அதை ஏற்றுக்கொண்டுவிட்ட சமுதாயத்தையும், என்ன கொடுமை சார் இது என்று சொல்வதைத் தவிர வேறு இல்லை.
     சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருவோம். வினாயக சதுர்த்தியை ஒட்டி பக்த கேடிகள் மன்னிக்கவும் பக்த கோடிகளின் ஆர்ப்பாட்ட ஆன்மீக வெளிப்பாடுகள் அவர்களின் அறியாமை, பொறுப்பின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எற்படுத்தும் பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் கொண்டு செய்யப்பட்ட வினாயகர் சிலைகள், சாலை நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.  உண்டியல் வசூல், மிகுந்த சத்தத்துடன் ஒலிக்கும் ஒலிபெருக்கி என கலைகட்டுகிறது வினாயகர் சதுர்த்தி விழா. குழந்தைகள், வயதுமுதிர்ந்தோர், நோய்வாய்ப்பட்டோர் என எவரையும் பற்றி இவர்கள் யோசிப்பதில்லை. இவர்களின் பக்தி பரவசத்தில் பாதிக்கப்படவேண்டியதுதான்.  அடுத்து வினாயகர் ஊர்வலம், இது பக்தியை அல்ல படாடோபத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான் நடைபெறுகிறது.  மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை காணமுடிகிறது. இந்த விளம்பர பக்தி தேவையா?
உள்ளம் பெருங்கோயில் என்றார் திருமூலர். பேசா துறவியாய் சேவையையே பக்தி என வாழ்ந்து காட்டினார் ரமணர். மக்கள் சேவையையே பக்தி என்று பசிப்பிணி போக்கினார் வள்ளலார். இந்த வழியில் வந்த நாம் பக்தியின் புனிதத்தை  வீண் அமர்க்களத்தால் கெடுக்காமலிருந்தால் நம் மதம் மனிதநேயத்தின் வெளிப்பாடாய் அமையும். அதைத்தான் இறைவனும் விரும்புவார். இதை நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப்போகிறோம்? எல்லாம் வல்ல அந்த வினாயகர் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
ரெ.ஐயப்பன்

Wednesday 4 September 2013

மழுங்கிய எழுதுகோல்கள்(ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை)





மழுங்கிய எழுதுகோல்கள்
                     (ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை)

நம் குழந்தைகள் ஊரில் மிகப்பெரிய, சிறந்த வசதிகள் கொண்ட பள்ளியில் கல்வி கற்கிறார்கள் என்று பெற்றோர்களே மகிழ்ந்து விடாதீர்கள், உங்கள் குழந்தைகள் அடிமைகளைத்தான் ஆசிரியர்களாகக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், என்பது முன்னோர் வாக்கு. ஆனால் இன்றோ, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் எழுத்தறிவிப்பவன் ஆசிரியன் அல்ல. வாழ்க்கைச் சூழலில் கட்டுண்டு, முதலாளித்துவ எஜமானர்களின் முன்னே, முழங்கால் போடும் மிகச் சிறந்த அடிமைகளாகவே திகழ்கின்றனர்.
பள்ளிக்கட்டணம், பாடத்திட்டம், உள்கட்டமைப்பு வசதிகள், ஆங்கிலச் சூழல் என தனியார் பள்ளிகளின் பல கூறுகளைப் பேசும் சமூகம் ஏன் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையைப் பற்றி இதுவரை பெரிதாகப் பேசவில்லை.
கல்லும், மண்ணும், கரன்சி நோட்டுகளும் கல்விக்கூடத்தை அமைத்திடுமா? கண்டிப்பாக இல்லை. ஆசிரியர்களின் எடுத்தியம்பும் ஆற்றல், அர்ப்பணிப்பு உணர்வு இவையே கல்விக்கூடங்களைத் தட்டியெழுப்பும். ஒரு சில வகுப்புகளையும், மிகக் குறைந்த மாணவர்களையும் கொண்டு துவங்கிய பள்ளிகள் இன்று மிகப்பெரிய கட்டிடங்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் கொண்டிருப்பது எதனால்? தனியார் பள்ளி முதலாளிகள் என்றாவது யோசித்திருப்பார்களா? இல்லை........ இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஆசிரியர்கள் தான் என்று ஏற்றுக் கொளவார்களா? இரண்டையுமே அவர்கள் ஏற்கவில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
கொடுத்த வாக்கைக் காக்க, தன் மனைவியையும் மகனையும் விற்ற அரிச்சந்திரன் போல, தாய், தந்தையின் பல்லாண்டு உழைப்பினால் வந்த பணத்தைக் கொண்டு கண்விழித்து, வறுமைமிகக் கடந்து, படித்து பெற்ற பட்டத்தை... அடகுக் கடையில் அடமானம் வைப்பதைப் போல் தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடம் அடகு வைத்துவிட்டுத்தான் பள்ளிக்குள் ஒர் அடிமையாக வலம் வரமுடியும்.  அவனுக்கு ஆசிரியன் என்ற பெயர் எப்படிப் பொருந்தும்? மேலும் பல குடும்பங்களின் சொத்து பிள்ளைகளின் கல்வி ஒன்றே. அப்படிப்பட்ட குடும்ப சொத்தாகிய கல்விச்சான்றிதழை அடமானமாக வைக்காமல் சில ஆயிரம் ரூபாய்களைக் கூட ஊதியமாக பெறமுடியாது. இப்படியொரு கொடுமை வேறு எதாவது ஒரு தொழிலில் நடைபெறுகிறதா?
விரல் விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளைத் தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளுமே ஆசிரியர்களின் சான்றிதழை சிறைப்படுத்திய பின்பே பணி ஆணை வழங்குகின்றன. சிறைப்பட்ட சான்றிதழை ஜாமீனில் கூட மீட்டெடுக்கமுடியாத அடிமைகளாய், இஸ்திரி செய்த மேல் சட்டை, கழுத்துக்கு டை, காலுக்கு ஷு, நுனி நாக்கு ஆங்கிலம் என்று திரிந்து கொண்டு வேலைக்காகவும், சம்பளத்திற்காகவும், குடும்ப சூழலுக்காகவும் இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகத் தெரியவில்லையா இந்த சமுகத்திற்கு?
இத்தோடு முடியவில்லை இந்த அடிமைச் சாசனம். சில பள்ளிகளில் வைப்பு நிதியாக மூன்று மாதச்சம்பளம், கல்வியாண்டின் இடையில் வேலையை விட நேர்ந்தால் வைப்புநிதி மறுப்பு, அதே நேரத்தில் நிர்வாகம் எப்பொழுது வேண்டுமானலும் பணி நீக்கம் செய்யும். சொற்ப ஊதிய உயர்வு, சில நேரங்களில் ஊதிய உயர்வு மறுப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு தொகுப்பூதியம் என்று சுரண்டல் பலவகைகளில் தொடர்கிறது. பொதுவாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி, பொங்கல் போனஸ் கூட கிடையாது. விடுப்பு எடுக்காமல் சேர்த்த ஈட்டுறுதி கூட அடுத்த ஆண்டு பணியில் தொடர்ந்தால் மட்டுமே பெற முடியும் என்று அடிமை சாசனப் பட்டியல்  சீனப் பெருஞ்சுவராய் நீள்கிறது. இத்தனை நிபந்தனைகளுடன் நியமனம் பெறும் ஆசிரியர்களின் பணிச்சூழல் எப்படி?
விட்டு வைக்குமா முதாலாளித்துவம்? சில பள்ளிகளில ஆசிரியர்களுக்கென்று தனியறை கிடையாது. இருந்தால் மிகக் குறைந்த வசதிகளுடன் தான். வகுப்பறைகளில் நாற்காலி கிடையாது, வெறும் மேஜை மட்டும் தான், அப்படியே நாற்காலி இருந்தாலும் அதில் அமரக்கூடாது என வாய்மொழி உத்தரவு வேறு.  கூடுதலாக சிறப்பு வகுப்புகளுக்கு எந்த ஊதியமும் தரப்படுவதில்லை. வேலைக்கு அமர்த்திய முதல் வருடத்தின் மே மாதத்தில் ஆசிரியரின் பணி பறிக்கப்பட்டு ஊதியம் மறுக்கப்படுகிறது. ஆசிரியரும் ஜுன் மாத வேலைக்காக உடன்படுகிறார். சாதாரண விடுப்பு தவிர வேறு எந்த விடுப்புகளும் கிடையாது. ஊரில், உறவுகளில் நடக்கும் எந்த நல்லது, கெட்டது என எதற்கும் செல்ல முடியாத சூழல், விடுப்பு என்று ஒன்று எடுத்தால் சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை.
ஆசிரியர்கள் என்ன உடை அணியவேண்டும்? எப்படி அணியவேண்டும்? அரை கையா? முழு கையா? என்ன மொழி பேசவேண்டும்? எவரிடம் பேசவேண்டும்? என்று பல விதிமுறைகள். இது போதாதென்று ஆசிரியர்கள் மதிய வேளையில் எங்கு அமர்ந்து சாப்பிடவேண்டும், கையினால் சாப்பிடவேண்டுமா அல்லது கரண்டியினால் சாப்பிட வேண்டுமா? என்று அனைத்தும் பள்ளி நிர்வாகத்தால் முடிவு செய்யப்படுகிறது. எவரேனும் பள்ளியின் குறைகளை எடுத்தியம்பினால் அவர் ஒன்று வெளியேற்றப்படுவார் அல்லது பணிச்சுமையினால் பழிவாங்கப்படுவார். ஆமாம்சாமிகள், ஜால்ராக்கள் மற்றும் கோள் சொல்லிகள் மட்டுமே மகிழ்ச்சியாக காலத்தை ஓட்ட முடிகிறது. சுய சிந்தனைவாதிகளின் நிலை நரகம் தான்.
இச்சூழலில் நிர்வாகத்தின் கிடுக்கிப்பிடி ஒரு புறம், தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கவோ ஏன் கண்டிக்கவோ முடியாத சூழல் மறு புறம். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் தம் குழந்தையின் தகுதிக்கு மீறியதாய் இருப்பது, சினிமாவால் கேலியாக சித்தரிக்கப்படும் ஆசிரிய சமுதாயத்தை நிஜமாகவும் அப்படியே செயல் படுத்த நினைக்கும் மாணவ சமுதாயம் என தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை படு கேவலமானதாக உள்ளது.  எத்தனையோ பட்டங்களை பெற்றுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கென்று எந்த சங்கமும் இல்லாதது மிகப் பெரிய கொடுமை.  பாடத்திட்டத்தில் சமநிலையை கொணர்ந்த அரசு ஏன் தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க உத்தரவு இடவில்லை? தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஓட்டு வங்கி பற்றி யோசிக்கவில்லையோ?
பணிப்பாதுகாப்பு இன்றி, முறைப்படுத்தப்பட்ட ஊதியமின்றி, முறையான ஊதிய உயர்வு இன்றி, கல்விச் சான்றிதழை அடகு வைத்து எத்தனையோ மாணவர்களை ஏற்றிவிடும் தனியார் பள்ளி ஆசிரிய ஏணிகள் அடிமைச்சேற்றில் உழன்று கொண்டிருக்கின்றன என்பது வேதனைக்குரியது. பெரும்பாலான அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் தனியார் பள்ளிகளில் தான் படிக்கின்றனர். இந்த கொள்கைவாதிகளுக்கு ஏன் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை பற்றி சிந்தனையில்லை? இவர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களை வெறும் கூலிகளாகத்தான் பார்க்கின்றனர் என்றே எண்ணத்தோன்றுகிறது.
தனியார் பள்ளிகள் ஆசிரியர்களின் பணிநியமனத்திற்கு சான்றிதழ்களை வாங்கி வைக்கக்கூடாது என்று அரசோ, நீதிமன்றமோ அறிவித்தால், குறைந்த சம்பளத்தில் நிறைய உழைக்கும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளி ஆசிரியர்களின் மனதில் நிம்மதி என்ற சொல் பெயரளவிலாவது எஞ்சியிருக்கும்.
அழியாச் செல்வம் அடகு போவதோ....
அன்னை மடிக்கு அயலார் வரி விதிப்பதோ....
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்....
ரெ.ஐயப்பன்