Saturday 23 August 2014

என் தேசம் என் மக்கள்


என் தேசம் என் மக்கள்
(வலிமையான ஆசிரியர்கள் தேவை)
        சுமார் 20 அடி நீளம், 20 அடி அகலம் இது தான் என் இராஜ்ஜியம். 30லிருந்து 40 பேர் தான் என் குடி மக்கள். இப்படி சொல்லும் போது கூட லேசாக வலிக்கிறது ஏனென்றால் அரசாட்சி தத்துவத்திலிருந்து நாம் பரிணாம வளர்ச்சியடைந்து வெகு நாட்கள் ஆகிறது.  எப்படியோ நான் சொல்லவந்தது என் வகுப்பறைகள் தான். இது தான் என் தேசம், மாணவச்செல்வங்கள் தான் என் மக்கள்.
நான் ஆசிரியனா? அரசனா? என் தேசத்திற்கு? பதில் அதை நான் முடிசெய்வதில்லை என் மாணவ மாணவிகள் தான்.  நான் உணருவது என்னவென்றால் நான் ஆசிரியானாக இருக்க முயற்சிசெய்தாலே என்னை அரசனாகவே ஆக்கிவிடுகிறது இந்த மாணவ சமுதாயம். ஆனால் அரசனாக/அரசியாக ஆசிரியர் நடந்து கொண்டால் அவரை மாணவர்கள் எதாகவும் மதிப்பதில்லை. ஆனால் இந்த விவாதத்தில் உள்ள தவறு எது என்றால், ஏன் வகுப்பறையில் ஒருவர் வயது, அறிவு அல்லது ஆற்றல் காரணமாக ஆதிக்கம் செல்லுத்தவேண்டும். வகுப்பறைகளில் நடக்கவேண்டியது ஆதிக்க போட்டியல்ல. ஒரு மூத்த குடிமகன் இளைய குடிமக்களுக்கு அறிவையும், ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக தான் வகுப்பறைகள் இருக்கவேண்டும் என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
பெரும்பாலான வகுப்பறைகளில் நடப்பது என்ன?
பாதிக்கும் மேற்பட்ட நேரம் தேர்வுக்கான கேள்வி பதில் தயாரிப்பது மற்றும் அதை பதிவு செய்வதிலேயே போய்விடுகிறது. மீதி நேரத்தில் குறு தேர்வுகள், விசாரணைகள், குறுக்கீடுகள் போக ஆசிரியர் – மாணவர் கலந்துரையாடல், விவாதம் கருத்து உருவாக்கம், புதிய மாற்றங்களை நோக்கிய சிந்தனைகள், கலாசாரத்தை மேம்படுத்தும் வழிமுறைகள், புதிய அறிவியல் தேடல்கள், பரிசோதனைகள், சுய பரிசோதனை முயற்சிகள், விழுமங்கள் மீதான பார்வை, சமூக பிரச்சனைகளில் நிலைப்படுகள் எடுத்தல், ஜனநாயக போக்கு, அடக்குமுறை, அதிகாரத்திற்கு கீழ்படியாமை, பலவீனமானவர்களிடம் பரிவு, சான்றோர்கள், பெரியவர்களை மதித்தல், நாட்டுப்பற்று மற்றும் மனிதநேய சிந்தனைகள் போன்றவற்றிற்கு வகுப்பறைகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்ற கொடும் பொய்யை சொல்லும் தைரியம் நமக்கு உள்ளதா என்ன?
நேரமில்லை என்பது எளிய பதிலாகதான் அமைந்து விடுகிறது. என் கேள்வி என்னவென்றால் மேற்கூறியவற்றில் பள்ளிகளை நடத்துவோர், அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களின் கொள்கை என்ன?  இவற்றையெல்லாம் போதிக்கும் தகுதி இவர்கள் எல்லோருக்கும் இருக்கிறதா? சாராயம் விற்கும் அரசு, பணம் வாங்கி வேலைதரும் உதவி பெறும் பள்ளிகள், கல்வியை வியாபாரமாக்கிவிட்ட தனியார் கல்வி நிறுவனங்கள், சுதந்திர சிந்தனையில்லா அடிமை தனியார் ஆசிரியர்கள், சுயநல சிந்தனை கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், மதிப்பெண்களை குறிவைக்கும் பெற்றோர் என என் தேசத்தின் மக்களான மாணவச்செல்வங்கள் மீது இந்த சமுதாயம் தாக்குதல் நடத்துகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
ஒன்று கடிவாளம் கட்டிய குதிரைகளாக மாணவர்களை ஆக்குவது அல்லது கீழ்படிதல் என்ற பெயரில் மாணவர்களின் சுதந்திர சிந்தனைகளை ஒடுக்கி நிர்வாகம் அல்லது ஆசிரியரின் போக்கில் வேலை வாங்குவது அதாவது தன்னை போலவே மற்றுறொறு அடிமையை உருவாக்குவது என்ற வகையில் தான் பணிகள் நடக்கின்றன வகுப்பறைகளில்.
எல்லா மாணவர்களும் ஒரே விதமாக கற்பதில்லை எனவே எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமாக தேர்வு நடத்துவதும் சரியல்ல. நாம் இன்னமும் எழுத்து தேர்வு முறையை மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறொம். சோழர்கள் எந்த எழுத்துதேர்வு வைத்து பொறியாளர்களை உருவாக்கி தஞ்சை பெரிய கோயிலை கட்டினார்கள்?
முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தோல்வி அடையும் மாணவனுக்கு எந்த முக்கியத்துவமும் தராமல் அடுத்த பருவத்திற்கு கொண்டு செல்லுதல் என்ன கல்வியியல் சிந்தனை என்று எனக்கு தெரியவில்லை.
    எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது மாணவ சமுதயத்தை வீணாக்கும் செயல் என்பதை இந்த அரசு உணராதா?
மாணவர்கள் தேர்வுகளில் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது தவறு ஆனால் ஆசிரியர் நோட்ஸ் பயன்படுத்துவார், பயன்படுத்த அறிவுறுத்துவார் அது மட்டும் சரி, என்ன நியாயம்? ஆசிரியரே வினாவாகவும், விடையாகவும் இருக்க வேண்டாமா? அதற்கு ஆசிரியர் துறை சார்ந்த புத்தகங்களை படிக்கவேண்டாமா? எத்தனை ஆசிரியர்களிடம் துறை சார்ந்த மூலப்புத்தகங்கள் இருக்கின்றன?
கட்டாயம் ஒரு வகுப்பறையில் மெல்லக்கற்போர் என சிறு எண்ணிக்கையில் இருக்கும் மாணவர்களுக்கு என்று நமது கல்வி அமைப்பு முறை என்ன செய்கிறது?  சிறப்பு வகுப்பு என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளை மனப்பாடம் செய்ய வைக்கும் முயற்சிதான் நடைபெறுகிறது. 
ஒரு சிறிய ஆசிரிய குழு அல்லது ஒரு சில ஆசிரியர்கள் ஒட்டுமொத்த பள்ளியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கும் சர்வாதிகார போக்கு இல்லை என்று பொய் சொல்லும் அளவிற்கு நம் மனசாட்சி அழுகிப்போய்விட்டதா என்ன? தலைமை ஆசிரியர்கள் தலையாக அல்ல பலருக்கு வாலாக இருக்கிறார்கள் என்பது தான் உன்மை.  பதவிக்காகவும் அதிக சம்பளத்திற்காக மட்டுமே அவர்கள் அந்த பதவியில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமல்ல இந்த சமுதாயத்திற்கே தெரிந்த விஷயம்.
எத்தனை அரசு ஆசிரியர்கள் பணி ஒய்வு பெற்ற உடனும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிகின்றனர், ஏன்? இளையோருக்கு வழிவிட்டால் என்ன? 35 ஆண்டுகாலம் தன் சிறந்த பணிக்காக சமுகத்திலிருந்து ஊழியம் பெற்றவர்கள் ஓய்வுக்கு பிறக்காவது இலவசமாக கிராம பள்ளிகளுக்கு ஏதாவது செய்யக்கூடாதா?

பாடத்திட்ட்த்தில் சமசீர் தன்மையை கொண்டுவந்துள்ள அரசு ஏன் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனையான ஊதியம் வழங்க தனியார் பள்ளி நிர்வாகங்ளை கட்டாயப்படுத்தவில்லை? 
திறன் மிகுந்த மாணவர்களை ஊக்குவிக்க அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது? சிந்திக்க மறுக்கிறதா அரசு?
அடிமை அமைச்சர்களை வைத்துக்கொண்டு சுதந்திரமான கல்விதுறை சாத்தியமா?
ஆசிரியரை வெறும் எழுத்து தேர்வு மட்டும் வைத்து தேர்வு செய்வது சரியா? தினம்தோறும் அவர் கற்பித்தல் பணியை செய்ய போகிறார், அவருடைய கற்பித்தலை எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வெறும் எழுத்துதேர்வை மட்டுமே வைத்து பணிக்கு அரசு தேர்ந்தெடுக்கிறது. ஒரு சமையல்காரரை தேர்thetheதெடுக்கும் போது அவர் சமையலை சாப்பிட்டுவிட்டு தான் அவரை தேர்தெடுக்கிறோம் ஆனால் ஆசிரிய பணிக்கு அவ்வாறு செய்வதில்லை என்பது முட்டாள்தனத்தின் உச்சாணி என்பது அரசுக்கோ? கல்வியாளர்களுகோ தெரியவில்லையா?
அனைத்தும் கற்றறிந்த சான்றோர் கூட்டம் சம்பளத்தை தவிர எதற்காகவும் குரல் உயர்த்தவோ? போராடவோ தயாரக இல்லை, அந்த சம்பளத்திற்காக கூட தனியார் பள்ளி ஆசிரியர்கள் குரல் உயர்த்த குரல்வளை அற்ற ஊமைகளாக இருக்கிறார்கள். இந்த ஊமைகள் தான் தனியார் பள்ளி மாணவர்களின் ஆசிரியர்கள். வாழ்க நம் கல்வி.

கொள்கையற்ற ஆசிரியன், கோட்பாடு அற்ற ஆசிரியன், துணிவு இல்லாத ஆசிரியன், புரட்சியை போதிக்காத ஆசிரியன், மாற்றங்களை ஏற்காத ஆசிரியன், மாற்று சமுதாயத்தை நம்மால் உருக்கமுடியும் என்ற நம்பிக்கை கூட இல்லாத ஆசிரியன் ஆசிரிய இலக்கணத்தை கேவலப்படுத்துவதோடு மோசமான சமுதாயத்தை கட்டமைக்கும் பாவத்தை செய்கிறான். இது போன்ற ஆசிரியர்களால் மாணவ சமுதாயம் எளிதாக ஆசிரியர்களை புறந்தள்ளிவிட்டு சினிமா நாயகர்களை ஆசிரிய்ர்களாக்கிகொண்டுவிட்டது.

வீரம், விவேகம், ஆற்றல், தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மையான பணிவு, அஞ்சாமை, தலைமைப்பண்பு கொண்ட ஆசிரியர்கள் அருகிவிட்டார்கள் என்ற உண்மை நெஞ்சை சுடுகிறது. வலிமையான ஆசிரியர்கள் தேவை என்ற அறிவிப்பு பலகை தமிழகமேங்கும் உள்ள பள்ளிகளில் தொங்கவிடவேண்டிய அவசியம் வந்து விட்டது என்பதை கோபத்துடன் பதிவு செய்கிறேன்.  
 



 

Friday 22 August 2014

இந்தியாவை தாக்குமா எல்நினோ?



             இந்தியாவை தாக்குமா எல்நினோ?           
                                


இந்தியா ஒரு வெப்பமண்டல பருவக்காற்று நாடு. நம் நாட்டின் நீர் தேவையை பருவக்காற்றுகள் தான் தருகின்றன. பருவக்காற்றுகள் பாதிப்படையும் போது இந்திய விவசாயம் மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. உணவு தானிய உற்பத்திக்குறைவில் தொடங்கி, விலையேற்றம் என கடைசியில் பசி, பட்டினி வரை கொண்டுசெல்கிறது இந்த பருவக்காற்றின் பாதிப்புகள். இத்தகு பருவக்காற்றுகளை பற்றி அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
 பருவக்காற்றுகள் ஆண்டுதோறும் ஒரே சீராக வீசுவதில்லை. இவற்றை பல காரணிகள் கட்டுப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று தான் எல்நினோ. இந்த ஆண்டு எல்நினோ வலுப்பெற்று இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். என்ன இந்த எல்நினோ? இது எவ்வாறு இந்திய பருவக்காற்றுகளை பாதிக்கிறது என்று இக்கட்டுரையில் பார்போம்.
     இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள பருவக்காற்று நாடுகளை எல்நினோ பாதிக்க வாயப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக இருக்க உலக வானியல் கழகத்தின் பொது செயலர் மைக்கெல் ஜெரால்ட் எச்சரித்துள்ளார். இந்த எல்நினொவால் வட மற்றும் தென் அமெரிக்காவில் கடும் மழைப்பொழிவும் தெற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சியும் ஏற்படலாம். இந்திய வானியல் துறையும் இந்தியாவில் பருவக்காற்றுகள் எல்நினோவால் பாதிக்கப்படும், அதனால் சராசரி மழையளவை விட குறைந்த மழையே இந்த ஆண்டு இருக்கும் என எச்சரித்துள்ளது.

பொதுவாக இந்தியாவில் 85% மழை தரும் பருவக்காற்றான தென்மேற்கு பருவக்காற்றுகள் ஜீன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை வீசுகின்றன. இதற்கு காரணம் மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சூரியனின் செங்குத்து கதிர்கள் வட கோளார்த்தத்தில் உள்ள இந்திய நிலபரப்பு முழுவதையும் சூடாக்கி வளிமண்டலத்தில் உள்ள காற்றை சூடாக்கி, லேசாக்கி நகர்த்திவிடுகிறது.  உப அயன மண்டல ஜெட் காற்றொடைகளும் இமயமலைக்கு வடக்காக நகர்ந்து திபெத் பீடபூமியில் வலுப்பெறுகிறது. இதனால் இந்தியாவின் வளிமண்டலம் முழுவதும் காற்று குறைந்து குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறது.  இதை நிறைவுசெய்ய தென் கோளார்த்தத்திலிருந்து காற்றுகள் தென் கிழக்காக வீசத்தொடங்கி பூமத்திய ரேகையை கடக்கும் போது புவி சுழற்சியால் ஏற்படும் விலகு விசையால் திசை திருப்பப்பட்டு இந்தியாவின் தென் மேற்கிலிருந்து இந்திய நிலப்பரப்பை நோக்கி வீசுகிறது. இந்த ஈரம் மிகுந்த காற்று இந்திய நிலத்திற்கு மழையை தருகிறது. இது சாதாரன வழக்கமான நிகழ்வு ஆகும்.

தென்கோளார்த்தத்திற்கு  காற்றுகள் பசுபிக்கிலிருந்து வருகிறது. அவையே பருவக்காற்றாக இந்திய பெருங்கடல் பகுதிக்கு நுழைகிறது. பசுபிக்கிலிருந்து காற்று ஆசிய பகுதிக்கு வரவேண்டுமானால் தென் கிழக்கு பசுபிக் அதாவது தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளிலிருந்து காற்று மேற்காக வீசி ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய பகுதிக்குள் வரவேண்டும்.  அண்டார்டிகாவிலிருந்து பாயும் கடும் குளிர் நீரோட்டமான பெரு குளிர் நீரோட்டம் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் வெப்பநிலையை குறைத்து காற்றை சுருங்க செய்து அதிக காற்றழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் காற்று கிழக்கு பசுபிக்கிலிருந்து மேற்கு பசுபிக் நோக்கி நகர்கிறது. அதுவே ஆசியாவின் பருவக்காற்றாக அமைந்து விடுகிறது. இந்த வழக்கமான நிகழ்வு எல்நினோ ஆண்டுகளில் பாதிக்கப்படுகிறது அல்லது மாற்றியமைக்கப்படுகிறது.
     எல்நினோ ஆண்டுகளில் பெரு குளிர் நீரோட்டத்தின் வெப்பநிலை உயர்கிறது.  தென் கிழக்கு பசுபிக்கின் கடல் வெப்ப உயர்விற்கு சராசரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை, இருப்பினும் 4 முதல் 6 ஆண்டு இடைவெளிகளில் ஏற்படும் இந்த வெப்ப உயர்வு தென் கிழக்கு பசுபிக்கின் காலநிலையை மாற்றி அமைக்கிறது. வெப்ப உயர்வால் காற்று சூடாகி, லேசாகி குறைந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்துகிறது.  இதனால் கிழக்கு பசுபிக்கிலிருந்து மேற்கு பசுபிக் அல்லது ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய பகுதிகளுக்கு வழக்கமாக செல்ல வேண்டிய காற்றுகள் பலமிழக்கின்றன. இவை ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய பருவக்காற்றுகளை பலவீனமாக்கி மழைக்குறைவு மற்றும் வறட்சியை ஏற்படுத்துகின்றன.  அதே நேரத்தில் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கடும் மழைப் பொழிவையும் வெள்ளத்தையும் ஏற்படுத்துகின்றன.   
இந்த ஆண்டு எல்நினோ ஆண்டாக அமைந்து விட்டதால் அதை தற்போது நிலவும் மழைப்பொழிவிலிருந்து உணர முடிகிறது.  ஜீன் முதல் தேதியிலிருந்து ஜூலை 15 ஆம் தேதி வரை பெய்த தென்மேற்கு பருவ மழை வழக்கமான மழையளவிலிருந்து 24% குறைவு என்று இந்திய வானியல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில்  எல்நினோ  நிகழ்வு இருமடங்கு அதிகரித்துள்ளது. இதே அளவுகளில் புவி வெப்பமடைதல் தொடர்ந்தால் எல்நினோ நிகழ்வுகள் 2090 மிக கடுமையாக இருக்கும். 2002 எல்நினோ ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 56% மழையளவு வழக்கமான அளவிலிருந்து குறைந்தது.  2009 எல்நினோ ஆண்டில் இந்தியாவில் 23% மழையளவு குறைந்தது. அதன் விளைவாக வறட்சி, உணவு தானியங்களின் விலை உயர்ந்தது.
உலக வெப்பமாதலால் எல்நினோக்கள் உந்தப்படுகின்றன. உலக வெப்பமடைதலுக்கு பணக்கார நாடுகளும், வளரும் நாடுகளில் உள்ள சிறிய பணக்கார வர்கமும் தூபம் போடும் போது எல்நினோக்களின் அதிகரிப்பு தவிர்க்கமுடியாததாகிறது. ஆனால் எல்நினோவால் பருவக்காற்று பாதிக்கப்படும்போது வேளாண்மை பாதிப்பு, வருமானக்குறைவு மற்றும் விலைவாசி உயர்வு என்று ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பணக்கார வர்கத்தின் பாவத்திற்கு ஏழை மக்கள் தண்டனை அனுபவிப்பதா? இந்த காலநிலை அநீதிக்கு பொருப்பாளர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? வாழ்க்கையை மாற்றிக்கொள்ளப் போகிறார்களா? அல்லது நஷ்ட ஈடு கொடுக்கப்போகிறார்களா? ரெ.ஐயப்பன்
சமுக அறிவியல் ஆசிரியர்