Tuesday 15 November 2016

பணம் பதுக்கிய முதலைகளை காண முடியவில்லை



பணம் பதுக்கிய முதலைகளை காண முடியவில்லை
இந்தியாவில் இருந்து கருப்பு பணம் ஒழியப்போகிறது என்ற வாதமும், ஒரு மிக நல்ல காரியத்தை பிரதமர் மோடி அவர்கள் செய்து விட்டார், இப்போது என்ன சொல்கிறீர்கள் என்று சவால் விடுவதையும் பார்கிறேன். 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பதால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் முழுவது வெளியே வரும் என்பதை நம்ப முடியவில்லை. ஆற்றின் மாசுகளை துணியில் வடிகட்டுவது போன்றது தான் இது. கருப்பு பணத்தின் ஊற்றுக்கண், அடைபடும் வரை நதி தூய்மையடைய போவதில்லை. இது விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படலாம். கருப்பு பணம் உருவாவதை தடுக்காமல் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது.
இந்த அறிவிப்பால் வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம் வெளியே வராது, சொத்துக்களாக மாற்றப்பட்ட கருப்பு பணம் வெளியே வராது, தங்கமாக மாற்றப்பட்ட கருப்பு பணம் வெளியே வராது. பணத்தை கட்டு கட்டாக பதுக்கி வைத்திருப்பவர்கள் அதை பினாமிகள் வழியே ஓரளவு கருப்பு பணத்தை காப்பாற்றிவிடுவர். ஓரளவு பணம் வேண்டுமானால் எரிக்கப்படலாம், கிழிக்கப்படலாம், அரசுக்கு சற்று வரி வருமானம் உயரலாம். ஆனால் இது நிரந்தரமா? முன்னாள் நிதியமைச்சர் திரு.சிதம்பரம் சொல்வது போல் இதன் பயன் சொற்பமாக தான் இருக்கும் என தோன்றுகிறது. நாட்டின் பொது நலன் கருதி என்ற போர்வையில் மோடி விளம்பரம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு புரம் கார்பரேட் நிறுவனங்களின் விளம்பர தூதராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பாரதத்தின் பிரதமருக்கு யார் சொல்வது அவர் கைகுலுக்குபவர்களிடம் கருப்பு பணம் தஞ்சமடைந்துள்ளது என்று?
ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் வைத்திருந்தாலே அது கருப்பு பணம் என்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டது இந்த அரசு. எங்கள் உழைப்பில் துளிர்த்த அந்த சொற்ப பணத்தை சந்தேகித்து விட்டது இந்த அரசு. ராகுல் காந்தியும் அரவிந் கெஜ்ரிவாலும் சொல்வது போல் வங்கியின் முன் நிற்கும் நீண்ட வரிசையில் பணம் பதுக்கிய முதலைகளை காண முடியவில்லை.
வருமானம் இல்லாதவர்கள் பேரில் சொத்து வாங்ககூடாது என்ற சட்டத்தை அரசு கொண்டுவரமுடியுமா?
தங்கம் வாங்குவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் எனறு ஒரு சட்டத்தை அரசால் உருவாக்க முடியுமா?
நிலம் அரசின், மக்களின் சொத்து, நிலத்தை அரசிடம் மட்டுமே விற்கவோ வாங்கவோ முடியும் என்ற நடைமுறையை அரசால் கொண்டுவரமுடியுமா?
பொருள்களின் உயர்ந்த பட்ச விலையை அரசின் ஒப்புதலோடு தான் நிர்ணயிக்கமுடியும் என்ற நடைமுறையை இந்த அரசால் உருவாக்க முடியுமா?
இதையேல்லாம் செய்யும் அளவிற்கு இந்த அரசு நியாமான அரசா? இவ்வளவு ஏன் பிரதமர் மோடியின் டிஜிடல் இந்தியா கனவை நினைவாக்கும் தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ எப்படி 6 மாதங்களுக்கு அளவில்லா இணையத்தை வாடிக்கையாளர்களுக்கு தரமுடிகிறது? இந்த கேள்வியை அரசால் 4ஜி ஏலத்தை நேரடியாக எடுக்க இயலாத இந்த நிறுவன உரிமையாளரிடம் கேட்க முடியுமா?
பஞ்சாபை சார்ந்த பாஜக நிர்வாகி 6/11 அன்றே 2000 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து முகநூலில் வெளியிட்டதை ஆம் ஆத்மி வெளிகொண்டுவந்துள்ளது. இதற்கு பாஜகவின் பதில் என்ன? கருப்பு பணத்தை ஒழிக்க உண்மையில் இந்த அரசுக்கு அக்கறையிருந்தால் அரசியல் கட்சிகளிடம் குவிந்துள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர என்ன திட்டம் வைத்துள்ளது? சுமார் பத்து மாதங்களாக இதற்காக வேலை செய்கிறோம் என்று பிரதமர் சொல்வது உண்மையானால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழைகள் உள்ளது புகைப்படத்துடன் வெளியாகும் செய்திகளுக்கு அரசின் பதில் என்ன?

Wednesday 21 September 2016

பாரதியே உனை தேடி அலைகின்றேன்



   பாரதியே உனை தேடி அலைகின்றேன்

காற்று வெளியினிலே
கவிதை பாடிய தமிழ் நிலா
இந்த மண்ணில் வந்தது உலா
இல்லாத பொழுதென்று உண்டா சொல்?
பாரதி சொல்லாத சொல்லொன்று
தமிழில் உண்டா சொல்?
முக்காலம் உணர்ந்திட்ட ஞாணி அவன்
ஆணாக பிறந்திட்ட கலை வாணி அவன்
சொற்கோலம் போடும் அவன் பாட்டு
பன் மொழி சாத்திரமே
அவனுக்கு சாப்பாடு
தமிழ் அரசே! அவன் முகத்தினையே
தமிழ் நாட்டின் இலச்சினையாய், நீ போடு
வகையாக பாட்டெழுத
தொகை வாங்கும் காலமிது
முறையான பாட்டெழுதி – வெறும்
முண்டாசுடன் போனவனே
உயர் குடியில் பிறந்தாலும்
துயர் நெடிய கண்டவனே
முடி சூடும் மன்னரும்
உன் அடி வருடி நின்றனரே
இலக்கணத்தை உடைத்தவனே
புது கவிதை படைத்தவனே
உன் தலைக்கணத்தை குறைக்காமல்
தமிழில் புது இலக்கியத்தை நிறைத்தவனே
அரியணை வாசம் உதறியவன் நீ
சுதந்திர வெளியில் அலைந்தவன் நீ
படைக்கு அஞ்ஞாத பரங்கிய அரசு
உன் பாட்டு நடைக்கு அஞ்சியது
உனை சிறைபடுத்த கெஞ்சியது
அரசனென்று எவனையும் ஏற்றதில்லை
அதிகாரமுள்ள எவரையும் போற்றியதில்லை
துதி பாடியவர் மத்தியில்
மதி பாடியவன் நீ
இது விதி இது விதி என்றவரிடம்
இது சதி இது சதி என்றவன் நீ
கவி அரசே, வரி எழுதும் உனக்கு
வருமானம் இல்லாதது விந்தை தான்
சந்தைக்காக பாட்டெழுதாமல்
மக்கள் மந்தைக்காக பாட்டெழுதினாய்
அவர் தம் சிந்தையை திருத்தினாய்
உன் மெய் வருத்தினாய்
தமிழ் திமிர் இருந்ததினால்
தலை நிமிர் என்றாய்
தலை குனிவென்றால்
சமர் சமர் என நின்றாய்
காக்கை குருவி எங்கள் சாதி என்றாய்
இதுவே இங்கு சம நீதி என்றாய்
பாரதியே
அயல் மொழிகள் ஆள்கிறது,
தமிழ் மண்ணை
தமிழ் பிள்ளைகள் மறக்கிறது,
உன் தமிழ் பண்ணை
தமிழ் பாடி வந்த குயிலே
உனை தேடி அலைகின்றேன்
உனை போல் சீற்றம்
கொள்ள உரமில்லை
பன் பாட திறமில்லை
அரசாளும் மன்னவருக்கு
தமிழ் மேலே உணர்வில்லை
கற்றோரும், சான்றோரும்
தவிக்க விட்ட தமிழ் தனையே
மீட்டெடுக்க வருவாயோ?
இளைய நாவுகளில்
தமிழ் கவியை தருவாயோ?
தமிழ் பாடி வந்த நிலவே
உனை தேடி அலைகின்றேன்.
ரெ.ஐயப்பன்

Saturday 3 September 2016

ஆசிரியன்

3/09/2016                    ஆசிரியன்
தமிழ்தாயே
இணக்கம் இல்லாதவர்களுக்கு
வணக்கம் வைப்பதில்லை நான்
சுணக்கம் இல்லாமல்
உனக்கு வைப்பேன்
ஆயிரம் வணக்கங்கள்
ஆசிரியன் என் கவிதை தலைப்பு
ஆசிரியமே என் வாழ்க்கை பிழைப்பு

வெளுக்காத கிழக்குகளை
சலவை செய்யும் ஆதவன்
அடங்காத ஆவினத்தை
ஆள்கின்ற மாதவன்
அரும்பு மலர்களின்
ஆசை நாயகன்
யார் தெரியுமா? ஆசிரியன், ஆம் ஆசிரியன்

ஆள் பிடித்து நடக்கும் குழந்தை
ஆசிரியன் சொல் பட்டதும்
எழுது கோல் பிடித்து நடக்கும்
ஏர் பிடிக்கும் உழவன் முதல்
அரியனை தாள் பிடிக்கும் அரசன் வரை
தொழுவது ஆசிரியனைத் தான்.
.
ஆசிரியன்
வகுப்பறை வானத்தின் வானவில்
வண்ணங்களால் அல்ல,
எண்ணங்களால் அலங்கரிப்பவன்

திசையை கற்பிப்பவன் ஆசிரியன்
நல் இசையை கற்பிப்பவன் ஆசிரியன்
எண்ணை கற்பிப்பவன் ஆசிரியன்
எழுத்தை கற்பிப்பவன் ஆசிரியன்
உடலை கற்பிப்பவன் ஆசிரியன்
நல் உணர்வை கற்பிப்பவன் ஆசிரியன்
அறிவை கற்பிப்பவன் ஆசிரியன்
நல் அறத்தை கற்பிப்பவன் ஆசிரியன்
தூரிகை முதல் ராஜ பேரிகை வரை
கற்பிப்பவன் ஆசிரியன்

ஆயிரம் கணிணிகள் அறிவை அளிக்கலாம்
அறத்தை வளர்ப்பவன் ஆசிரியன் தான்

மாணவர்களுக்காக யோசிப்பவன்
தேவைப்பட்டால் யாசிப்பவன்
புத்தகங்களை நாள்தோறும் வாசிப்பவன்
எளிமையை ஏராளமாய் சுவாசிப்பவன், ஆசிரியன்.

வரம்புகளுக்குள் பயணிப்பவன் அல்ல ஆசிரியன்
வானத்து விளிம்புகளில் பயணிப்பவன் ஆசிரியன்

ஆசிரியன்
சந்தைக்காக உழைப்பவன் அல்ல
சிந்தைக்காக உழைப்பவன்

பணத்திற்கு வணங்குபவன் அல்ல ஆசிரியன்
மாணவ இனத்திற்கு இணங்குபவன் ஆசிரியன்

அறைகளுக்குள் மாணவர் தம்
அறியாமை திரைகளை விலக்குபவன் ஆசிரியன்

அடுத்த தலைமுறைக்கு தூதுவன் ஆசிரியன் தான்
ஆம் ஆசிரியன் தான்
அறிவை அடுத்த தலைமுறை கடத்துகிறான்
தன் வாழ்வை அற வழியில் நடத்துகிறான்

அறிவில் வீழ்பவர்களை தாங்கி பிடிப்பவன் ஆசிரியன்
அவர்களை வீழ்த்தும் சக்திகளை தாக்கி அழிப்பவன் ஆசிரியன்

தூங்கி வழியும் மாணவர்க்கும்
ஏங்கி நிற்கும் மாணவர்க்கும்
திசைகளாய் வழிகாட்டுபவன் ஆசிரியன்

ஆசிரியன்
கரைகளை கடந்த ஞாண நதி
விலை போகாது இவன் மதி
அறிவும், அறமுமே இவன் நிதி
ஆள்வோரே, ஆசிரியனே
நல் ஆசிரியனை மதி மதி மதி
ரெ.ஐயப்பன்