Wednesday 21 September 2016

பாரதியே உனை தேடி அலைகின்றேன்



   பாரதியே உனை தேடி அலைகின்றேன்

காற்று வெளியினிலே
கவிதை பாடிய தமிழ் நிலா
இந்த மண்ணில் வந்தது உலா
இல்லாத பொழுதென்று உண்டா சொல்?
பாரதி சொல்லாத சொல்லொன்று
தமிழில் உண்டா சொல்?
முக்காலம் உணர்ந்திட்ட ஞாணி அவன்
ஆணாக பிறந்திட்ட கலை வாணி அவன்
சொற்கோலம் போடும் அவன் பாட்டு
பன் மொழி சாத்திரமே
அவனுக்கு சாப்பாடு
தமிழ் அரசே! அவன் முகத்தினையே
தமிழ் நாட்டின் இலச்சினையாய், நீ போடு
வகையாக பாட்டெழுத
தொகை வாங்கும் காலமிது
முறையான பாட்டெழுதி – வெறும்
முண்டாசுடன் போனவனே
உயர் குடியில் பிறந்தாலும்
துயர் நெடிய கண்டவனே
முடி சூடும் மன்னரும்
உன் அடி வருடி நின்றனரே
இலக்கணத்தை உடைத்தவனே
புது கவிதை படைத்தவனே
உன் தலைக்கணத்தை குறைக்காமல்
தமிழில் புது இலக்கியத்தை நிறைத்தவனே
அரியணை வாசம் உதறியவன் நீ
சுதந்திர வெளியில் அலைந்தவன் நீ
படைக்கு அஞ்ஞாத பரங்கிய அரசு
உன் பாட்டு நடைக்கு அஞ்சியது
உனை சிறைபடுத்த கெஞ்சியது
அரசனென்று எவனையும் ஏற்றதில்லை
அதிகாரமுள்ள எவரையும் போற்றியதில்லை
துதி பாடியவர் மத்தியில்
மதி பாடியவன் நீ
இது விதி இது விதி என்றவரிடம்
இது சதி இது சதி என்றவன் நீ
கவி அரசே, வரி எழுதும் உனக்கு
வருமானம் இல்லாதது விந்தை தான்
சந்தைக்காக பாட்டெழுதாமல்
மக்கள் மந்தைக்காக பாட்டெழுதினாய்
அவர் தம் சிந்தையை திருத்தினாய்
உன் மெய் வருத்தினாய்
தமிழ் திமிர் இருந்ததினால்
தலை நிமிர் என்றாய்
தலை குனிவென்றால்
சமர் சமர் என நின்றாய்
காக்கை குருவி எங்கள் சாதி என்றாய்
இதுவே இங்கு சம நீதி என்றாய்
பாரதியே
அயல் மொழிகள் ஆள்கிறது,
தமிழ் மண்ணை
தமிழ் பிள்ளைகள் மறக்கிறது,
உன் தமிழ் பண்ணை
தமிழ் பாடி வந்த குயிலே
உனை தேடி அலைகின்றேன்
உனை போல் சீற்றம்
கொள்ள உரமில்லை
பன் பாட திறமில்லை
அரசாளும் மன்னவருக்கு
தமிழ் மேலே உணர்வில்லை
கற்றோரும், சான்றோரும்
தவிக்க விட்ட தமிழ் தனையே
மீட்டெடுக்க வருவாயோ?
இளைய நாவுகளில்
தமிழ் கவியை தருவாயோ?
தமிழ் பாடி வந்த நிலவே
உனை தேடி அலைகின்றேன்.
ரெ.ஐயப்பன்

Saturday 3 September 2016

ஆசிரியன்

3/09/2016                    ஆசிரியன்
தமிழ்தாயே
இணக்கம் இல்லாதவர்களுக்கு
வணக்கம் வைப்பதில்லை நான்
சுணக்கம் இல்லாமல்
உனக்கு வைப்பேன்
ஆயிரம் வணக்கங்கள்
ஆசிரியன் என் கவிதை தலைப்பு
ஆசிரியமே என் வாழ்க்கை பிழைப்பு

வெளுக்காத கிழக்குகளை
சலவை செய்யும் ஆதவன்
அடங்காத ஆவினத்தை
ஆள்கின்ற மாதவன்
அரும்பு மலர்களின்
ஆசை நாயகன்
யார் தெரியுமா? ஆசிரியன், ஆம் ஆசிரியன்

ஆள் பிடித்து நடக்கும் குழந்தை
ஆசிரியன் சொல் பட்டதும்
எழுது கோல் பிடித்து நடக்கும்
ஏர் பிடிக்கும் உழவன் முதல்
அரியனை தாள் பிடிக்கும் அரசன் வரை
தொழுவது ஆசிரியனைத் தான்.
.
ஆசிரியன்
வகுப்பறை வானத்தின் வானவில்
வண்ணங்களால் அல்ல,
எண்ணங்களால் அலங்கரிப்பவன்

திசையை கற்பிப்பவன் ஆசிரியன்
நல் இசையை கற்பிப்பவன் ஆசிரியன்
எண்ணை கற்பிப்பவன் ஆசிரியன்
எழுத்தை கற்பிப்பவன் ஆசிரியன்
உடலை கற்பிப்பவன் ஆசிரியன்
நல் உணர்வை கற்பிப்பவன் ஆசிரியன்
அறிவை கற்பிப்பவன் ஆசிரியன்
நல் அறத்தை கற்பிப்பவன் ஆசிரியன்
தூரிகை முதல் ராஜ பேரிகை வரை
கற்பிப்பவன் ஆசிரியன்

ஆயிரம் கணிணிகள் அறிவை அளிக்கலாம்
அறத்தை வளர்ப்பவன் ஆசிரியன் தான்

மாணவர்களுக்காக யோசிப்பவன்
தேவைப்பட்டால் யாசிப்பவன்
புத்தகங்களை நாள்தோறும் வாசிப்பவன்
எளிமையை ஏராளமாய் சுவாசிப்பவன், ஆசிரியன்.

வரம்புகளுக்குள் பயணிப்பவன் அல்ல ஆசிரியன்
வானத்து விளிம்புகளில் பயணிப்பவன் ஆசிரியன்

ஆசிரியன்
சந்தைக்காக உழைப்பவன் அல்ல
சிந்தைக்காக உழைப்பவன்

பணத்திற்கு வணங்குபவன் அல்ல ஆசிரியன்
மாணவ இனத்திற்கு இணங்குபவன் ஆசிரியன்

அறைகளுக்குள் மாணவர் தம்
அறியாமை திரைகளை விலக்குபவன் ஆசிரியன்

அடுத்த தலைமுறைக்கு தூதுவன் ஆசிரியன் தான்
ஆம் ஆசிரியன் தான்
அறிவை அடுத்த தலைமுறை கடத்துகிறான்
தன் வாழ்வை அற வழியில் நடத்துகிறான்

அறிவில் வீழ்பவர்களை தாங்கி பிடிப்பவன் ஆசிரியன்
அவர்களை வீழ்த்தும் சக்திகளை தாக்கி அழிப்பவன் ஆசிரியன்

தூங்கி வழியும் மாணவர்க்கும்
ஏங்கி நிற்கும் மாணவர்க்கும்
திசைகளாய் வழிகாட்டுபவன் ஆசிரியன்

ஆசிரியன்
கரைகளை கடந்த ஞாண நதி
விலை போகாது இவன் மதி
அறிவும், அறமுமே இவன் நிதி
ஆள்வோரே, ஆசிரியனே
நல் ஆசிரியனை மதி மதி மதி
ரெ.ஐயப்பன்