Tuesday 15 September 2015

காற்று மாசு



காற்று மாசு
[என்னுடைய மாணவர் ஒருவர் கேட்டதற்காக எழுதியது]
கால வெளிகளை கடந்து
வாண வெளியெங்கும்
கடவுள் போல் நிறைந்திருப்பது, காற்று
ஆதி முதல்
இன்றைய தேதி வரை – நம்மை
வாழ வைப்பது காற்று தான்
நம் நாசி நுகர – காற்றில்
ஆக்ஸிஜன் குறைந்துவிட்டால்
காலன் கதவருகே
வந்து நிற்பான்
என்னுடன் வர ரெடியா?
என்று கூவி அழைப்பான்.
காற்றின் தேசத்தில்
மரங்கள் தான் மன்னர்கள்
கரியமில வாயுவை
தன்னுள் கட்டியாக்குகிறது
தன் வேரால் – மண்ணை
கெட்டியாக்குகிறது
உயிர் காற்றை
காற்றின் கலவையில் ஊதுகிறது
காற்றின் பகைவர்களோடு
பசுமையின் காவலனாய் மோதுகிறது
வாகனப் புகையினால் வந்தது வம்பு
இது அறிவியல்
விட்ட அம்பு
சாலையெங்கும் புகை மேகம்
இது நமக்கு பகை மேகம்
மழை தந்து உயிர்
வாழ வைக்கும் மேகமல்ல
நோய் தந்து உயிரை
வீழ வைக்கும் மேகம்
மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு
ஆலையால் தாஜ்மகால்
கறுத்து விட்டது என்ற
கவலை சிலருக்கு.
தாஜ்மகாலை பற்றிய
கவலை எனக்கில்லை
அது ஆடம்பர சமாதி
அரச அதிகாரத்தின் ஆணவ சின்னம்
அன்பின் கோர வெளிப்பாடு
தாஜ்மகால் கறுத்து விட்டது
என்று கவலைப்படாதிர்கள்
புகையை வடி கட்டி வடி கட்டி
நம் நுரையீரல் சிறுத்து விட்டது
என்னடா இது வாழ்க்கை என வெறுத்துவிட்டது.
காற்றை காப்பாற்ற என்ன செய்வது?
இது கருத்தரங்க தலைப்பு
ஏ.சி யை சுவாசிக்கும் கணவான்களே
காற்றறை நீங்கள் நேசிப்பது
உண்மையானால்
ஏ.சி பெட்டிகளை உடைத்தெறியுங்கள்
ஏ.சி பெட்டிகளால் தான்
வெளியாகிறது சி.எப்.சி
இனியும் ஏ.சி வேண்டுமா?
நீ யோசி?
உன் உடல் சுகப்பட
ஓசோன் உடைபட வேண்டுமா?
இப்படியே போனால்
இந்த பூமி 100 ஆண்டு தாண்டுமா?
காற்றை மாசுபடுத்த ஒரு விழா
அது தீபாவளி என்னும் திருவிழா
பட்டாசு சத்தத்தில்
காற்றின் கவசம் உடைகிறது
காற்றின் கற்பு குறைகிறது
அழுக்கான காற்று
இழுக்கான மனிதனின்
ஆயுள் குறைக்கிறது
பட்டாசு விழாக்களை
நொடியில் மறுப்போம்
வெடிகளால் அல்ல
பசுங் கொடிகளால்
அலங்கரிப்போம் விழாக்களை
காற்று மண்டலத்தின்
காவலாளிகள் மரங்கள் தான்
நம் கரங்கள்
மரங்களைக் காக்காவிட்டால்
காற்றைக் காப்பது கடவுள் தான்.
ரெ.ஐயப்பன்






No comments:

Post a Comment